July 07, 2020

நீண்ட வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கவிதைகள்.....

ஒரு நாள் வானம்
ஒருநாள் நிலா
ஒருநாள் மரங்கள்
ஒருநாள் பறவைகள்
ஒவ்வொரு நாளும் சர்வ சுதந்திரமாய்
திருடு போகின்றன....


இறந்த வண்ணத்துப் பூச்சியை
சுமக்கும் எறும்புகளின் ஊர்வலம்...
பிணத்தைச் சுமக்கும் கவலையா?
உணவைச் சுமக்கும் மகிழ்ச்சியா?


வெளிச்சமும் இல்லை 
வேலையும் இல்லை
வாயேன் கொஞ்சம் 
வானம் வரை போய்வரலாம்....


எறும்பு கடிக்காத போது 
ஏன் கொன்றாய்?
சாகும் எறும்பின் 
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனதைக்
குற்றமில்லை என்கிறதா?
உலகில் நசுக்க மிகச்சுலபம்
எறும்புதான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?


புரிந்து கொள்ளப்படாத நாட்களின் 
வெறுமையான நாட்குறிப்பில் 
தாமாகவே வந்தமர்ந்திருக்கிறது
எனக்கு பிடித்தமான 
உன் புன்னகை...

No comments: